குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் – மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, September 3rd, 2022

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பொருளாதார அபிவிருத்தி வேகம் சாதகமான நிலைக்குக் கொண்டுவரப்படுவதுடன், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால நோக்கு’ என்ற தலைப்பில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் போது குறைந்த வருமானம் பெறுபவர்களே பிரதானமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்பு வலையமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்குப் பொருளாதார ரீதியான அசௌகரியங்கள் அதிகரித்தால், ஏழைகள் வீதிக்கு இறங்க நேரிடலாம் என்றும், இதனால் குழப்பமான சூழ்நிலை நாட்டில் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறைந்த வருமானம் பெறுபவர்களின் அசௌகரியங்கள் கட்டுப்படுத்தப்பட்டு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன், கடன் பெறுவது கட்டுப்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தன்மை மற்றும் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தன்மை என்பனவற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதியைக் கட்டுப்படுத்தியதன் ஊடாக கடந்த வருடத்தில் செலவீனத்தை 2 பில்லியன் ரூபாவரையிலும், இந்த வருடத்தில் 1.3 பில்லியன் ரூபாவரை குறைக்க முடிந்துள்ளது.

இதனூடாக மருந்து, எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடிந்தது.

தற்பொழுது அரசாங்கத்தின் வருமானம் 1.2 பில்லியன் ரூபாவாக மாத்திரம் காணப்படுவதுடன், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்க முடிந்தால் அரசாங்கத்தின் வருமானத்தில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இதேவேளை இந்த நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியாது, எனினும், இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை இந்த நெருக்கடிகளைப் பொறுத்துக் கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகிறது.

இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தின் வருமானம் 14 முதல் 15 விகிதம் வரையில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: