காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அராலி வடக்கு மக்கள் கோரிக்கை!
Wednesday, July 11th, 2018அராலி வடக்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் காணி உரிமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.
வலிகாமம் மேற்கு பிரதேச ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அராலி அலுவலகத்தில் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கையை அவர்கள் விடுத்திருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் – அராலி வடக்குப் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் 30 வருடங்களுக்கு மேலாக தமது வாழிடங்களை தற்காலிகமாக அமைத்து 30 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் குறித்த காணியில் குடிநீர் வசதிகூட இல்லாத நிலையில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்கள் தமக்கான நிரந்தர வீடுகளை அமைப்பதற்காக தாம் தற்போது குடியிருக்கும் காணிகளுக்கு நிரந்தர உரிமத்தை வழங்குமாறு குறித்த ஆலயத்தின் அறங்காவலர் என தெரிவிக்கப்படும் ஒருவரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களது கோரிக்கைக்கு இணங்கிய அந்த அறங்காவலர் குறித்த காணிகளுக்காக தலா 30 ஆயிரம் ரூபா வீதம் வழங்க வேண்டும் என்றும் ஆலய உண்டியலில் ஒரு தொகை பணத்தை இடுமாறும் கோரியிருந்த நிலையில் மக்கள் அதற்கு இணங்கம் தெரிவித்து அவற்றை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது அரசாங்கத்தினால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட உள்ள நிலையில் காணி உரிமம் இன்மை கரணமாக அது தடைப்பட்டுப் போவதனால் தமக்கு காணி உரிமத்தை தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஆலய தர்மகர்த்தா எனப்படும் நபர் அதனை வழங்க மறுத்துள்ளார்.
இந்நிலையிலேயே குறித்த காணியின் உரிமத்தை பெற்றுத்தந்து தமக்கு காணி உரிமம் இன்மையால் தமக்கான அரச உதிவித்திட்டங்கள் பலமுறை மறுக்கப்பட்ட நிலையில் இம்முறை வழங்கப்படவுள்ள நிரந்தர வீடுகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர்.
மக்களது கோரிக்கைகளை அவதானத்தில் கொண்ட சிவகுரு பாலகிஸ்ணன் குறித்த விடயம் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|