கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

Thursday, November 15th, 2018

யாழ் மாநகரின் கழிவகற்றல் நடவடிக்கைகளை தனியார் துறையிடமிருந்து உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்பது என்பது யாழ் மாநகரின் சுகாதார சேவைகளுக்கு நலன்தருவதாக அமையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது மாநகரின் சுத்திகரிப்பு தொழிலை மேற்கொள்ளும் தனியாரது சேவையை நிறுத்தி மாநகரசபை அதனை பொறுப்பேற்க வேண்டும் என பலரும் விவாதிக்கின்றனர். ஆனால் உடனடியாக அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுப்பதானால் யாழ் மாநகரசபை ஆளணிகளை கொண்டு நிவர்த்தி செய்ய முடியாது போக வாய்ப்புள்ளது.

 யாழ் மாநகரசபை குறித்த செயற்பாட்டை மேற்கொள்வதானது சபைக்கு வருமானத்தை தருவதாக இருப்பதென்பது உண்மைதான் ஆனாலும் தனியாரை உடனடியாக நிறுத்துவதானது மாநகரின் சுகாதார சேவையை  கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகவே அமையும்.

அந்தவகையில் குறித்த நடவடிக்கையை ஒரு சமச்சீரான காலத்தில் படிப்படியாக குறைத்து மாநகரசபை பொறுப்பேற்பதனூடாகவே அதை சீர்ப்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே குறித்த சேவையை மாநகரின் சேவைப்பிரிவினருக்கு துறைசார் தரப்பினரூடாக பயிற்சிகள் வழங்கி அதை படிப்படியாக பொறுப்பேற்பதே  மாநகரின் சுகாதாரத்திற்கும் அழகுக்கும் வழிவகை செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: