கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் – கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கும் விசேட ஏற்பாடு – பிரதி பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Monday, February 7th, 2022

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் இந்த பரீட்சையானது, இன்றையதினம்முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சார்த்திகள் உரிய அடையாள ஆவணங்களுடன், நாளாந்தம் காலை 7.45 க்கு பரீட்சை மண்டபத்துக்கு பிரவேசிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை 2,437 பரீட்சை மையங்களில் இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைக்கு 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அவர்களில், 2 இலட்சத்து 79 ஆயிரத்து 141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66 ஆயிரத்து 101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

அதேநேரம், பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை மண்டபங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா ஆறிவித்துள்ளார்..

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தமது பரீட்சைக்குரிய தினத்திற்கு முன்தினமே, மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசேட கொவிட் பரீட்சை நிலையத்திற்கு சமுகமளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு, அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் உரிய வகையில் வழங்கப்படும் எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவரானி புனிதா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: