கல்குடா கல்வி வலயத்திற்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்பபீட கட்டிட தொகுதி – ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்ப கற்கைகள் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்க படவேண்டும் இதனை நோக்காகக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலைக்கு 53.30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மூன்று மாடி உயர் தொழில்நுட்ப பீடம் அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கல்குடா வலயத்திற்குட்பட்ட இறால் ஓடை வள்ளுவர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய அரசாங்கத்தினால் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், நவீனமயப்படுத்தலும் இடம்பெறுகின்றது. இருந்தபோதிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்தை நோக்கியதான ஒரு மாற்றம் நடைமுறைப்படுத்துவது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

ஒவ்வொரு மாணவனுக்கும் இன்றைய நவீன தொழில்நுட்ப வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் வெறும் பரீட்சைகள் மாத்திரம் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க கூடாது, ஒவ்வொரு மாணவனுக்கும் அவரவர் துறை சார்ந்து வழிகாட்டலுடன் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்களது அறிவால், வாழ்வால், நல் ஒழுக்கத்தால், மாணவர்களை ஈர்த்து, மாணவர்கள் தங்களை தாங்களே வடிவமைத்துக்கொள்ள ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.ஆக மாணவர்களது முதல் நம்பிக்கை ஆசிரியர்களும், பெற்றோர்களும் தான் என்பதே உண்மை.

இந்த கற்கை நெறியின் ஊடாக உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் பல தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றது. தற்போது அரசாங்கத்தினால் 25 மாவட்டங்களில் பாடசாலைகளில் உயர் தொழில்நுட்ப பீடம் அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் வேலைத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் நான்கு பாடசாலைகள் உள்வாங்கப் பட்டுள்ளதுடன் அதில் திருகோணமலை மாவட்டத்திற்கு ஒரு பாடசாலையும் அம்பாறை மாவட்டத்திற்கு இரண்டு பாடசாலையும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா தேசிய பாடசாலையும் தொழில்முறை கல்விக்காக உயர் தொழில்நுட்ப பீடத்தை அமைப்பதற்காக கல்வி அமைச்சின் ஊடாக அனுமதி கிடைத்துள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: