கடலில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை!

Tuesday, May 31st, 2016

கடந்த 3 தினங்களில் அகதிகளை ஏற்றி வந்த 3 படகுகள் விபத்துக்குள்ளானதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருந்தனர்.

கடந்த புதன்கிழமை 600 பேருடன் பயணித்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில், அவர்களில் 100க்கும் குறைவானவர்களே மீட்கப்பட்டனர். இதில் பலரை காணவில்லை.அதேபோல் கடந்த வியாழக்கிழமை 670 பேரை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 550 பேர் மாயமாகினர்.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகில் இருந்து 135 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், 45 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும், பலரை காணவில்லை.

அனைத்து படகுகளும் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்த தருணத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் மனிதாபிமான அமைப்பு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை கடலில் மூழ்கி பலியான 1 வயது குழந்தையை பிணமாக மீட்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

கடலில் மிதந்த அந்த குழந்தையை ஜேர்மனியை சேர்ந்த மீட்புக் குழு அதிகாரி தனது கைகளால் அரவணைத்தப்படி இருக்கும் அந்த புகைப்படம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் விதமாக உள்ளது.

இந்த புகைப்படம் அகதிகளின் ஒட்டுமொத்த துயரத்தையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

அந்த குழந்தையின் உடலை மீட்ட மீட்பு அதிகாரி மார்ட்டின் கூறுகையில், கடலில் மிதந்த அந்த குழந்தையின் பிஞ்சுக் கைகளை பிடித்து அந்த உடலை தூக்கி நான் அரவணைத்துக் கொண்டேன். அதன் கண்களில் எந்த வித அசைவும் இல்லாமல் இருந்தது.

6 மணி நேரத்திற்கு முன்பு இந்த குழந்தை கண்டிப்பாக உயிருடன் தான் இருந்திருக்கும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

அந்த குழந்தை ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை அவர் குறிப்பிடவில்லை.

மனிதாபிமான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற புகைப்படங்களை நாம் மீண்டும் பார்க்காமல் இருக்க அகதிகள் உருவாவதை தடுக்க வேண்டும். அதேபோல் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts: