கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் – சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம்!

Monday, September 18th, 2023

நீண்ட காலமாக இடம்பெற்று வரும் கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை வீதியை மறித்து மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடலரிப்பு காரணமாக மீனவர்களின் ஓய்வு அறைகள், வாடிகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், படகுகள், வலைகளும் கடலரிப்பினால் கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த கடலரிப்பினை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் பாரிய கற்களை குவித்துள்ள போதிலும், அதில் தமது படகுகள் மோதி சேதமடைவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

இந்தநிலையில், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு பிரவேசித்த சாய்ந்தமருது காவல்துறையினர், கரையோரம் பேணல் திணைக்களத்தினர் மற்றும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: