கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு – பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 10th, 2022

விடுமுறை எடுக்காமல், கடமைக்கு சமுகமளிக்காமல் வெளிநாடுகளில் இருக்கும் முப்படை உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்புக் காலத்தை அறிவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த பொது மன்னிப்புக் காலத்தில், மீண்டும் படையில் சேராது, சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறும் வாய்ப்பு அளிக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர்25 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான காலப்பகுதியில் இருந்து கடமைக்கு சமுகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு மாத்திரமே டிசம்பர் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலம் செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து ஏதேனும் தொகை அறவிடப்படுமாயின், அதனை சட்டரீதியாக வெளியேறுவதற்கு முன்னர் செலுத்த வேண்டும் எனவும், விடுமுறை இன்றி பணிக்கு சமுகமளிக்காததைத் தவிர வேறு ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான காலவரையற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகள் இருக்கக் கூடாது எனவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அவர்கள் சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை அல்லது வெளிநாட்டுப் பயணத்தின் போது கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை மோசடியாகத் தயாரித்துக் கொள்ளவில்லை என்பதை குடிவரவுத் திணைக்களம் உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: