கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளம் அறிவிப்பு!

Friday, April 14th, 2023

ஜப்பான், இந்தியா, மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்காக இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களின் கடன் துயரங்களைத் தீர்ப்பதற்கான ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அந்த நாடுகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில் வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜப்பானிய நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி, இதுபோன்ற பரந்த அடிப்படையிலான கடனளிப்பவர்களின் குழுவைச் சேகரிக்கும் இந்த பேச்சுவார்த்தை செயல்முறையை ஆரம்பிப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று குறிப்பிட்டார். அத்துடன் இந்த குழு அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் மற்றும் சீர்திருத்தங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதற்கும் ஜப்பான் வழிகளைத் தேடி வருகிறது என்றும் ஜப்பானிய அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மீதான கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஆரம்பித்து வைத்து காணொளியின் ஊடாக உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்ப்பதில் இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளின் விரைவான முன்னேற்றத்தை இந்த முயற்சி குறிக்கிறது என்று தெரிவித்தார்.

ஒப்பிடக்கூடிய மறுசீரமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் வெளிப்படையான முறையில் அனைத்து கடன் வழங்கும் நாடுகளுடனும் மற்ற பங்குதாரர்களுடனும் தொடர்ந்து இணைந்து செயற்பட இலங்கை உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் தலைமையிலான கடன் வழங்குனர் தளத்தில் பங்கேற்குமாறு இலங்கையின் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.

இலங்கையில் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் கடன் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவதற்கு, இலங்கைக்கும் அதன் அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு முக்கியமானது என்று இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்வின்போது குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, இலங்கை, நெருக்கடியிலிருந்து விரைவாக மீள்வதற்கு விரைவான கடனைத் தீர்ப்பது அவசியம் என்று கூறினார்.

அத்துடன், அனைத்து இருதரப்புக் கடன் வழங்குநர்களும் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று முதல் மதிப்பாய்வுக்கு முன்னதாக அவற்றை தீர்த்துவைப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிரான்ஸின் திறைசேரி இயக்குனர் இம்மானுவேல் மௌலின், தமது குழுவானது முதல் சுற்று பேச்சுவார்த்தையை கூடிய விரைவில் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது.

சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், வாங் வென்பின் தமது வழமையான வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பை தீவிரமாக செயல்படுத்துவதில் சீன நிதி நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான கடன் வழங்குனர்களான, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ‘புதிய தளம்’ தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வென்பின், ‘சீனா தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார்.

அதே சமயம், நியாயமான சுமை பகிர்வின் அடிப்படையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களை சீனா அழைப்பதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: