ஓமந்தை விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியானது !

Monday, February 24th, 2020

ஓமந்தையில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஓமந்தை பொலிஸார் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெள்ளவத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை வாகனத்திற்குள் சாரதி சிக்கியிருந்த நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் பேருந்தும் வானும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் சாரதி தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் வான் சாரதி உட்பட 4 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான அரச பேருந்தின் சாரதியும் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் வாழும் காரைநகரைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது 83), ஆறுமுகம் தேவராஜா (வயது 62), தேவராஜா சுகந்தினி (வயது 51), தேவராஜா சுதர்சன் (வயது 30) மற்றும் சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது 24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா (வயது 29 ) என்பவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts: