ஒரு வாரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று : 250க்கும் அதிகமான மரணங்களும் பதிவு!

Sunday, May 23rd, 2021

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் 250 இக்கும் மரணங்களும்  பதிவாகியுள்ளன. அந்தவகையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்று உறுதியானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 800 பேருக்கு நேற்று கொவிட்- 19 தொற்று உறுதியாகியுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 617 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 280 பேரும், கண்டியில் 172 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 297 பேரும், காலியில் 278 பேரும், கேகாலையில் 109 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், அநுராதபுரத்தில் 108 பேருக்கும், மாத்தறையில் 109 பேருக்கும், திருகோணமலையில், 93 பேருக்கும், பதுளையில் 34 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 86 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நாடளாவிய ரீதியில் பொலிஸ் வீதித் தடைகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளிச்செல்லும் நபர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 423 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: