ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !!

Saturday, April 17th, 2021

நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களிலும் பொலன்னறுவ மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அதன்படி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுள்ளை மற்றும் மொனராகலை உட்பட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற திறந்த பகுதிகளை தவிர்க்கவேண்டும். இடியுடன் கூடிய மழைக்காலங்களில் கம்பி தொலைபேசி மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

ஈருருளி, உழவுயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வானிலை மையம் விடுத்துள்ளது.

Related posts: