ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச – எதிர்வரும் 22 ஆம் திகதியன்று இலங்கையின் நிலைப்பாடுகள் தொடர்பில் விசேட உரை!

Saturday, September 18th, 2021

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நோக்கி இன்று(18) காலை பயணமானார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், எதிர்வரும் 21 ஆம் திகதி நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி முதல் முறையாக கலந்துகொள்ள உள்ளதுடன், நாடு கடந்து, சர்வதேச கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விஜயத்தின்போது பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்

அதேவேளை, இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படும் தவறான கருத்துக்களைச் சரி செய்வது தொடர்பிலும் அவர் கவனம் செலுத்துவார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது, பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் சமூகரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் உரையின்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகத்தை தனித்தனியே சந்திப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் முக்கிய பல விடயங்களை உள்ளடக்கிய பேச்சை முன்னெடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்திக்கும் ஜனாதிபதி, அந்த தலைவர்களுடன் முக்கியமான பேச்சுகளை முன்னெடுப்பார் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: