எல்லைதாண்டி கைதான இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் – வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றச்சாட்டு!

Sunday, January 2nd, 2022

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி சட்டவிரோதமாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழக ஊடகங்கள் சில  உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் உபதலைவர் வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றையதினம் யாழ் சிறைச்சாலையில் இந்திய மீனவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்வில் கடற்றெழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் – அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் வைத்த இலங்கை கடற்படை கைது செய்ததாக இந்திய ஊடகங்கள் சில உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டன.

நாம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை சந்தித்தபோது அவர்களே தமது தவறை ஏற்றுக் கொண்டார்கள். நெடுந்தீவுக்கு மூன்று கிலோமீட்டருக்கு அண்மையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே தம்மைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை தொற்று நீக்கிகளுக்குப் பதிலாக வேறு மருந்துகள் விசிறப்பட்டதாக பொய்யான தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி காரணமாக வடக்கு மீனவர்கள் பல காலமாக சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எமது வாழ்வாதாரம் அளிக்கப்படுவதோடு நமது மீன்பிடி உபகரணங்கள் ரோலர் படகுகளினால் நாசம் செய்யப் பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இந்திய ரோலர் களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

ஆகவே இலங்கைக்கோ கடற்தொழில் அமைச்சுகோ அல்லது அமைச்சருக்கோ அபகீர்த்தி ஏற்படுத்தும் முகமாக உண்மைக்கு புறம்பான தகவல்களை இந்திய ஊடகங்கள்  வெளியிடுவதை தவிர்த்து கொள்ளவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: