எரிபொருள் – மின் பாவனையை சிக்கனப்படுத்த அரச நிறுவனங்களுக்கு பொது சேவைகள் அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்கள்!
 Wednesday, March 9th, 2022
        
                    Wednesday, March 9th, 2022
            
அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகளின் பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்காக வழங்கப்படும் மேலதிக எரிபொருள் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கூட்டங்கள் மற்றும் பிற நோக்கங்களுக்காக வெளிமாவட்ட அதிகாரிகளை கொழும்புக்கு அழைப்பதை மட்டுப்படுத்தவும் சுற்றறிக்கையினூடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த சுற்றறிக்கையில் மேலும் சில அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை பின்பற்றி எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக அவற்றில் மின் தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுகளை உபயோகித்தல். மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிர்த்து, சுகாதார வழிகாட்டலுக்கேற்ப பயணிக்கக்கூடிய உச்சபட்ட நபர்களின் எண்ணிக்கையுடன் பயணித்தல்.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள சந்தர்ப்பங்கள் வளி சீராக்கி பாவனையை தவிர்த்து மின்விசிறிகளை உபயோகித்தல். அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அனைத்து மின்விளக்கு, மின்சாதனங்களை அணைத்தல்.
பிற்பகல் 2.30 முதல் பி.ப 4.30 வரை வளி சீராக்கியின் செயற்பாட்டை இடைநிறுத்தல். காலை வேளையில் வெளிபுறச் சூழல் வெப்பநிலை குறைவு என்பதால் ஜன்னல்களை திறந்துவைத்து, வெளிபுற காற்றோட்டத்திலிருந்து பயன்பெற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வளிசீராக்கியை செயற்படுத்தல் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        