எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு – ஜூலை நடுப்பகுதிக்குள் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் எனவும் தெரிவிப்பு!

Saturday, July 2nd, 2022

எரிபொருள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கத்தினருக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கிடைக்காமையால் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில், இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்களினால், இதன்போது பிரதமருக்கு விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில், 90 சதவீதமானவை தற்போது மூடப்பட்டுள்ளன.

கையிருப்பில் உள்ள எரிபொருளை, அத்தியாவசிய சேவைகளுக்கு விநியோகிப்பதற்காக, எஞ்சியுள்ள 10 சதவீத நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், நேற்றைய கலந்துரையாடலில், வங்கிக் கடனை மீள செலுத்தல் மற்றும் ஊழியர்களுக்கு வேதனம் வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளை, இலங்கை கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம், பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்றையதினம் சுமார் 200 நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவக்கை எடுத்த நிலையில், இன்றையதினமும் அந்தப் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், நாட்டின் பல பாகங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்வற்காக பொதுமக்கள் கடந்த தினங்களாக பகலிரவாக நீண்ட வரிகைகளில் காத்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஜூலை 11 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு இடையில் 38,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜூலை 22 ஆம் திகதி வரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பெட்ரோல் கிடைக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 11,000 மெட்ரிக் தொன் டீசல், 5,000 மெட்ரிக் தொன் பெட்ரோல், 30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் மற்றும் 800 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: