எதிர்வரும் 11 ஆம் திகதி நாட்டின் முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த எச்சரிக்கை அவசியம் – எச்சரிக்கிறார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர்!

Wednesday, May 6th, 2020

எதிர்வரும் 11 ஆம் திகதி தற்பொழுது நாட்டில் உள்ள முடக்க நிலையை விடுவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆனாலும் மிகுந்த அவதானத்துடன் அனைவரும் இருக்கவேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் முடக்க நிலை தளர்த்தப்பட்டன் பின்னர் ஏதேனும் ஓர் பகுதியில் வைரஸ் தொற்று பரவினாலல் உடனடியாக அந்த பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நீங்காத நிலையிலேயே அரசாங்கம் நாட்டை திறப்பதாகவும், இதனால் மிகுந்த அவதானத்துடன் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது நாள் ஒன்றுக்கு சுமார் 1600 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் இது நாள்தோறும் 2500 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட வேண்டுமென்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறாயினும் நாட்டின் தற்போதைய நிலைமை சற்றே ஆரோக்கியமானது என்ற போதிலும் முடக்க நிலை தவிர்ப்பு அபாயத்தை உருவாக்கக் கூடிய நிலை உண்டு என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: