ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் முன்வைப்பு!

Thursday, April 27th, 2023

ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்டது.

முன்பதாக இந்தச் சட்டமூலம்  கடந்த மார்ச் 31 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதேநேரம் ஊழல் ஒழிப்பு சட்டமூல வரைவு அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கு கடந்த மார்ச் 13 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

இந்த நிலையில், குறித்த குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் சொத்து விபரங்களை வெளியிடுவது ஒரு சிலருக்கு விலக்களிக்கப்பட்டு வந்தது. எனினும், உத்தேச சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி, மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை வெளியிட வேண்டும்.

உத்தேச ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் மூலம், ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை வழங்கும் நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் திறன் உள்ளது. அத்துடன், இலஞ்ச ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது

Related posts: