ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் புகார் – குடும்ப அட்டையை கிழித்தெறிந்து அச்சுறுத்தினராம் என குற்றச்சாட்டு!

Thursday, November 11th, 2021

தனது கணவர் மீதான முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடாத்த வந்த பொலிஸார் குடும்ப அட்டையை கிழித்தெறிந்து தம்மை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில் –   ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பாட்டி கிராமத்தில் மரணச்சடங்கு ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது கணவரை விசாரணை செய்வதற்காக ஊர்காவற்துறை பொலிஸார் வீட்டுக்கு வந்தனர்.

சுமார் 10க்கும் மேற்பட்ட பொலிஸார் வீட்டுக்கு வந்தவுடன் அச்சுறுத்தும் வகையில் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டதுடன் வீட்டிலிருந்த பொருட்களை மற்றும் ஆடைகளை அள்ளி வீசினார். எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் பொலிஸார் கையடக்கத் தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து சோதனையிட முயன்றார்.

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவரை கைது செய்வதுபோல் வந்த ஊர்காவற்றுறை பொலிஸார் அடையாள அட்டையின் நிழல் பிரதிகளையும் குடும்ப அட்டையையும் கிழித்து வீசினர். ஆகவே எனது பிள்ளைகளுடன் எனது வீட்டில் வாழ்வதற்கு

எனக்கு அச்சமாக இருக்கின்ற நிலையில் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கிழிக்கப்பட்ட குடும்ப அட்டையை மீள பெறுவதற்கு உதவுமாறும்  கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: