உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது – பதவியிலிருந்து அகற்றியதற்கான சதிகள் – கோட்டாபயவின் நூல் வெளியீடு!

Thursday, March 7th, 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் குறித்து நூல் ஒன்றை இன்று வெளியிடவுள்ளார். 2019 நவம்பரில், ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்பட்டதுமுதல் சில உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்ததாக அவர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். 

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டதென தெரிவித்துள்ள அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் முதல் 60 வருடங்களில் இந்நிலை காணப்படவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

தன்னை அரசியலிலிருந்து அகற்றுவதற்கான அரசியல் பிரசாரம் இலங்கை அரசியலில் புதிய அம்சத்தை கொண்டுவந்ததெனவும் குறிப்பிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் ஆட்சிமாற்றங்கள் அமைதியான முறையிலேயே இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

2022 இல், இடம்பெற்ற சம்பவங்களால் நாட்டின் எதிர்காலத்துக்கு கடும் பாதிப்பென தெரிவித்துள்ள கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிமாற்றத்துக்கான நடவடிக்கைகளின் நேரடி அனுபவங்களை தனது நூல் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: