உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கை – பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உளுந்துக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து யாழ்ப்பாண வர்த்தக சேம்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது.
தமிழ் மக்களின் உணவில் உளுந்து முக்கியமானதாக இருப்பதாகவும் யாழ். வர்த்தக சேம்பர் தமது கடிதத்தில சுட்டிக்காட்டியிருந்தது.
இது குறித்து அவர்கள் அனுப்பிவைத்திருந்த கடிதத்தை இன்று அதிகாலையிலேயே கவனத்தில் எடுத்த பிரதமர் உடனடியாகவே ஜனாதிபதியின் செயலாளருடன் தொடர்புகொண்டு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் 30 ரூபாவுக்கு விற்பனையான வடை இப்போது 60 ரூபாவுக்கு மேலாக விற்பனையாவதாகவும் பிரதமருக்குச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இன்று காலை இக்கடிதத்தைப் படித்த பிரதமர், உடனடியாகவே ஜனாதிபதியின் செயலாளர்களுடன் தொடர்புகொண்டு உளுந்துக்கான தடையை நீக்க வேண்டும், அல்லது உளுந்து வர்த்தக நிலையங்களுக்குக் கிடைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|