உலகில் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச பெருமிதம்!

Monday, September 7th, 2020

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமரர் சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது-

யுத்தம் நிறைவடையும் காலத்தின்போது சந்திரசிறி கஜதீர, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர்.

இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது காலத்தில், 13 ஆயிரம் விடுலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி பொது வாழ்வில் இணைக்கப்பட்டனர்.

இன்று அரசியல் புலமை பற்றி நம் நாட்டில் பலர் மிகுந்த ஆர்வத்துடன் பேசுகிறார்கள். இருப்பினும், சந்திரசிரி கஜதீர நான்கு அல்லது ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்து இந்நாட்டின் புலமைவாய்ந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

அதுமாத்திரமின்றி அவர் பண்புமிகுந்த அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று கூற வேண்டும். அரசியலில் புலமைத்துவம் மிகவும் முக்கியமானது. கல்வியறிவும் மிக முக்கியமானது. அதுபோன்று சிறந்த பண்பும் அவசியம் என்பதை நவீன தலைமுறையினருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.

அரசியலுக்கு  புலமை மற்றும் சிறந்த பண்பு அவசியம் என்பதை சந்திரசிறி கஜதீரவிடமிருந்து இன்றைய அரசியல் உலகில் உள்ளவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்த பிரதமர் பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்துள்ளது. அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பனவே காரணமாக அமைந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: