உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை !

Saturday, April 1st, 2023

கொலன்னாவ எண்ணெய் சேமிப்பு முனையத்தை பலவந்தமாக முற்றுகையிட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பலர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பாதுகாப்பற்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக வலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் அமைச்சர் தனது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவ பெற்றோலிய முனையத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான வலயத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து, அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை முடக்கியதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அன்றைய தினம் நிறுவனத்திற்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டு, குறித்த சம்பவத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: