உயர்தரத்துக்குச் செல்லும் 1,75,000 மாணவர்களுக்கு இலவச ‘டெப்’  – கல்வி அமைச்சர்!

Thursday, March 30th, 2017

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் எதிர்பார்த்ததை விட விரைவாக பரீட்சை முடிவுகளைப் பெற்றுத் தர முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் க.பொ.த. உயர்தர மாணவர்கள், 1,75,000 பேருக்கு டெப் கனணிகளை வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக இம்முறை பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு முதலாவதாக டெப் கனனிகளை பெற்றுக் கொடுக்கப் போவதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த வருடங்களுடன் ஒப்படும் போது க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன் குறிப்பாக கணித பாடத்தில் சித்தியடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது. இந்த நிலையானது நாட்டின் கல்வித் துறையின் சிறந்த முன்னேற்றத்தினையே காட்டுகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அர்ப்பணிப்புடன் கற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள் உயர்தரத்திலும் சிறந்த வெற்றிபெற வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கற்கும் 1,75,000 மாணவர்களுக்கும் 28,000 ஆசிரியர்களுக்கும் ‘டெப்’ கணினிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இம்முறை சாதாரண தரத்தில் சித்திபெற்று உயர்தரம் செல்லும் மாணவர்களிலிருந்தே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: