உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தாமதம் – நாடாளுமன்றில் இன்றும் இடம்பெறாத போன கொழும்பு துறைமுக நகர விவாதம்!

Wednesday, May 5th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் இன்று (05) விவாதம் நடத்துவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தா யாபா அபேவர்தன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற நாடாளுமன்ற வணிகக் குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“நாட்டின் தற்போதைய நிலைமை” குறித்த ஒத்திவைப்பு விவாதம் இன்று (05) காலை 10 மணி முதல்மாலை 4.30 மணி வரை தொடரும் என்று நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தசநாயக்க தெரிவித்திருந்தார்.

இதேநேரம் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் இதுவரை பெறவில்லை என்று தசநாயக்க சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த சட்டமூல விவாதத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தாமல் விவாதம் இன்றும் தொடரும் என்று பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நடைமுறையில் உள்ள கொவிட் -19 சவாலை கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு சமீபத்தில் இந்த வார அமர்வை மே 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் மட்டுமே நடத்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Related posts: