உக்ரைனிய அதிபர் ஜெலன்சிக்கு எதிராக உள்ளக சதி – புலனாய்வுத் துறை தலைவர், அரச வழக்குத்தொடுனர் அதிரடி நீக்கம்!

Tuesday, July 19th, 2022

உக்ரைனின் பாதுகாப்பு நிறுவன தலைவரும் தனது நெருங்கிய நண்பருமான இவான் பெக்கானோவ் மற்றும் உக்ரைனின் வழக்கு தொடுநர் நாயகமான இரினா வெனெடிக்டோவா ஆகியோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி பதவி நீக்கியுள்ளார்.

எனினும் குறித்த இரண்டு அதிகாரிகளும் பதவி நீக்கப்படவில்லை எனவும் நிலுவை விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்கள் இருவரும் பதவிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபரின் உயர்மட்ட ஆலோசகர் அன்றீஸ் மிர்நோவ் கூறியுள்ளார்.

உக்ரைய்னின் வழக்கு தொடுநர் நாயகத்தின் அலுவலகத்தில் பணியாற்றிய 60 இற்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள், ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உக்ரைனுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக வெலெடிமீர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் பாதுகாப்பு படை மற்றும் ரஷ்ய விசேட சேவைகளுக்கு இடையில் உள்ள தொடர்புகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கேள்விகளுக்கு உரிய பதில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் உக்ரைய்ன் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட இவான் பெக்கானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் உக்ரைன் அதிபரின் இந்த தீர்மானம் குறித்து இதுவரை எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை.

உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் தலைவரான இவான் பெக்கானோவ், உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கியின் நீண்டகால நண்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரைய்மியா பிராந்தியம் மீதான எந்தவொரு வெளிப்புறத் தாக்குதல்களுக்கு எதிராகவும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வடேவ் எச்சரித்திருந்த நிலையில், உக்ரைன் அதிபர் இருவரையும் பதவி நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: