இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் – அமைச்சர் சரத்வீரசேகர வலியுறுத்து!

Saturday, September 4th, 2021

நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்புநடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பொலிஸார் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் அக்கறையின்றி இருக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எழுச்சியை கண்காணிக்கும் விடயத்தில் பொலிஸார் மேலதிக விழிப்புணர்வுடன் செயற்படவேண்டும் என சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட புலிகள் அமைப்பை ஒழிப்பதில் பொலிஸார் பெரும் சேவையை ஆற்றியது எங்களிற்கு தெரியும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஆனால் தற்போது நிலைமை வேறு நாங்கள் கண்ணிற்கு தெரியாத எதிரியுடன் போராடுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஒருவரை அடையாளம் காண்பது கடினம் என தெரிவித்துள்ள அவர் அவ்வாறான நபர்களிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் என்னவென்றால் அவர்கள் ஏனையவர்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பார்கள் அதன் பின்னர் தீவிரவாதத்திலிருந்து பயங்கரவாதத்திற்கு மாறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் எதிர்கொள்ள முடியும், ஆனால் பொலிஸார் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: