இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு பரிந்துரை!
Monday, December 5th, 2022இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, மறுசீரமைப்பின் கீழ் இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2002 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க மின்சார சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார சபைக்கு பதிலாக எட்டு புதிய நிறுவனங்களை ஸ்தாபிப்பது தொடர்பான குழு அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதிதாக நிறுவப்படும் 8 நிறுவனங்களின் கீழ், மின்சார உற்பத்திக்காக இரண்டு நிறுவனங்களும், பரிமாற்றத்திற்காக இரண்டு நிறுவனங்களும், விநியோகத்திற்காக நான்கு நிறுவனங்களும் உருவாக்கப்பட உள்ளன.
மின்சார உற்பத்திக்காக நிறுவப்படும் இரண்டு நிறுவனங்களில் ஒன்று நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காகவும் மற்றைய நிறுவனத்தை எரிபொருள் ஆலைகளுக்காகவும் நிறுவ முன்மொழியப்பட்டதாக அறியப்படுகிறது.
அந்த நிறுவனங்களை அரசுக்கு சுமையாக இல்லாமல் வணிக நிறுவனங்களாக நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவிக்குப் பதிலாக, இந்த எட்டு நிறுவனங்களுக்கும் உரிய அதிகாரியொருவரை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள், மின்சாரம், நீர் ஆகியவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக, மின்சாரத்துக்காக தனியான பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரியவருகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|