இலங்கையைச் சூழ வளிமண்டலவியல் தளம்பல் – நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Friday, November 26th, 2021

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் காணப்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து தற்போது இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது.

இதேநேரம் நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: