இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Wednesday, December 29th, 2021

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்த்த உதவியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றம் இறுதி செய்யப்பட்ட பின்னர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது எனவும் சர்வதேச செய்திகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் நாணய பரிமாற்றம் யுவானில் இடம்பெற்றதாகவும் தேவைப்பட்டால் அதை டொலர்களாக மாற்றலாம் என்றும் அறிக்கையிட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் கையிருப்பு சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாகவும், ஆண்டு இறுதிவரை அந்த அளவில் பேணப்படும் என்றும் இன்று புதன்கிழமை டுவிட்டரில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள இலங்கை மத்திய வங்கி, இருப்பினும் சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் கடனாக வழங்கிய சீனா இலங்கையின் மிகப்பெரிய இறக்குமதி வருமான ஆதாரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: