இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவு – தற்காலிக நெருக்கடி நிலையை இலங்கை விரைவில் வெற்றி கொள்ளும் எனவும் சீனா நம்பிக்கை!

Thursday, March 10th, 2022

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லீஜியாங்மே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு சீன வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை விடுத்த கோரிக்கை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் வினவினார்.

இதற்குப் பதிலளித்த ஊடகப் பேச்சாளர், இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் முயற்சியுடனும் ஒத்துழைப்புடனும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக நெருக்கடி நிலைமை விரைவில் வெற்றிக் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இலங்கை பெரும் அபிவிருத்தியை அடையும் என நம்புவதாக சீன வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: