இலங்கையின் பணவீழ்ச்சி குறித்து விசேட ஆராய்வு!
Thursday, October 4th, 2018இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் தேசிய பொருளாதார சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் ஏற்றுமதி துறையை மேம்படுத்துதல் மற்றும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதைத் தடுத்தல் தொடர்பாக இதன்போது விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதனைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதில் வெளிப்புற காரணிகளே செல்வாக்கு செலுத்தி உள்ளதாகவும் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் இதன்போது மத்திய வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்றுமதி துறையை மேம்படுத்துவதற்காக வழங்கக்கூடிய சலுகைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து தேசிய பொருளாதார சபை தெளிவூட்டப்பட்டதுடன், வரிக்கொள்கை தொடர்பாகவும் பொருளாதார சபை கவனம் செலுத்தியுள்ளது
அரச மற்றும் தனியார் துறையினர், பல்கலைக்கழக உபவேந்தர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகளின் பங்குபற்றலில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தேசிய பொருளாதார சபை ஒன்றுகூடியதுடன் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து புத்திஜீவிகளின் கருத்துக்கள் இதன்போது கேட்டறியப்பட்டது.
பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் சகல முதன்மை வர்த்தக சபைகளின் தலைவர்களும் மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளினதும் தனியார் வங்கிகளினதும் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|