இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Saturday, April 29th, 2023

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனவரியில் மொத்தம் ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 545 சுற்றுலாப் பயணிகளும், பெப்ரவரியில் ஒரு இலட்சத்து 7 ஆயிரத்து 639 பேரும் கடந்த மாதம் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 495 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என துறைசார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 87 ஆயிரத்து 316 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, ஏப்ரல் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 15 ஆயிரத்து 282 இந்தியர்கள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அத்துடன், ரஷ்யாவிலிருந்து 12 ஆயிரத்து 729 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7 ஆயிரத்து 625 பேரும், ஜேர்மனியிலிருந்து 6 ஆயிரத்து 734 பேரும், பிரான்சிலிருந்து 5 ஆயிரத்து 25 பேரும், அவுஸ்ரேலியாவிலிருந்து 4 ஆயிரத்து 368 பேரும், சீனாவிலிருந்து 3 ஆயிரத்து 767 பேரும், அமெரிக்காவிலிருந்து 2 ஆயிரத்து 989 பேரும் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4 இலட்சத்து 22 ஆயிரத்து 995 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: