இலங்கைக்கு ரஷ்ய எண்ணெய்க்கான தள்ளுபடி விலை ஏனைய நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!

Thursday, November 24th, 2022

சலுகை விலையிலும் சர்வதேச ஒழுங்குமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறாத பட்சத்திலும் ரஷ்யாவின் எண்ணெய்யை கொள்வனவு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ரஷ்ய எண்ணெய்க்கான தள்ளுபடி விலை மற்ற நாடுகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. ஏனெனில் எந்த நாடும் ரஷ்யாவை எரிபொருள் சந்தையில் இருந்து வெளியேற்ற விரும்பவில்லை.

எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா,வெளியேறும் பட்சத்தில், தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படும். இது ஒரு பொருளாதார கிளர்ச்சியை உருவாக்கும்.

உக்ரைன் – ரஷ்ய மோதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இராஜதந்திர ரீதியிலும் பேச்சுக்கள் ஊடாகவும் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

மசகு எண்ணெய், எரிபொருள், நிலக்கரி மற்றும் தானியங்களின் விலைகள் மாத்திரமல்லாம், உரங்களின் விலைகளும் அதிகளவில் உயர்வடைந்துள்ளதால், பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள மூன்று வீதமானவர்கள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளதால், உரத்தின் விலை உயர்வானது, அவர்களை பாதிக்கச் செய்துள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சந்தையில் இந்த பொருட்களின் விலைகள் நான்கு அல்லது ஐந்து மடங்கு வரை உயர்வடைகின்றமை இலங்கை மக்களை மிக கடுமையாக பாதித்துள்ளது.

அது மாத்திரமல்லாமல், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் உக்ரைனும் ரஷ்யாவும் உள்ளதுடன், தேயிலை போன்ற ஏற்றுமதிகளும் குறித்த நாடுகளுக்கு மேற்கொள்ப்பட்டது.

எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக சுற்றுலாத்துறை மாத்திரமல்லாமல் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: