இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி – கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ கருத்து!

Thursday, January 14th, 2021

கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு எப்பொழுது கொண்டு வரப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் ஹம்பாந்தோட்டையில் வைத்து ராஜாங்க அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

“தடுப்பூசி இலங்கைக்கு தருவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தி சிலர் இந்த தடுப்பூசியை தங்களுக்கு ஏற்றிக்கொண்டுள்ளனர். இவ்வாறு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் கேள்விப்படுகின்றோம்.

அமெரிக்காவே சொல்கின்றது இந்த தடுப்பூசி அவ்வளவு வெற்றியளிக்கவில்லை என்று. கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.” எனவும் சசீந்திர ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும், சுகாதார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத் தரப்புக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும் இதுவரையில் தடுப்பூசி தருவிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: