இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பாராட்டு !
Friday, October 29th, 2021
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தமது சேவைக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்றையதினம் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்திருந்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக, தூதுவர் வழங்கிய ஒத்துழைப்புகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.
கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அமெரிக்க தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவரின் எதிர்கால செயற்பாடுகள் சிறப்புப்பெற, ஜனாதிபதி இதன்போது தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


