இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அறிவிப்பு!

Wednesday, August 11th, 2021

நல்லூர் கந்தனின் உற்சவத்துக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர் முருகப் பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே நடைபெறவுள்ளது.

எனவே இந்த நெருக்கடி மிக்க அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மிக மிக பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு நல்லைக் கந்தன் அடியார்களை மிகப் பணிவாகக் கேட்டுக்கொள்ளப்பட்டள்ளது.

அத்துடன் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளையும் கருத்தில்கொண்டு சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும் நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதேநேரம் குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்துக்கு வருவதை முற்றாகத் தவிர்க்குமாறும் கொவிட் -19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் ஆலயச் சூழலிலும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீகச் சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: