இராணுவத் தளபதி – தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு!

Wednesday, October 20th, 2021

இராணுவத் தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியைச் சேர்ந்த இந்திய முப்படை தூதுக்குழுவினருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியின் விஜயத்தின் பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பினை தொடரும் பிரதிநிதி குழுவினர் ஐந்து நாள் விஜயத்தினை நோக்கமாக கொண்டு, 18 ஆம் திகதி காலை இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கைக்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான 18 பேர் கொண்ட குழுவினர், ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை நேரில் சந்தித்தனர்.

இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த அக்குழுவினரை பயிற்சி பணிப்பாளர் பிரிகேடியர் கபில டோலகே மற்றும் நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ரணவீர ஆகியோர் நுழைவாயிலில் வைத்து வரவேற்றதுடன் அவர்களை இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான பிரதிநிதிகள் குழுவை அன்புடன் வரவேற்று அவர்களுடன் உரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையே பல ஆண்டுகளாகத் தொடரும் இராணுவ ஒத்துழைப்பு குறித்து பாராட்டினார்

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, நட்புரீதியாக இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், இலங்கையில் நட்புறவை தொடரவிரும்பும் பிரதிநிதி தூது குழுவினர்களுக்கு சில நினைவுச்சின்னங்களை வழங்கினார்.

இதேவேளை வருகையின் நினைவுச் சின்னமாக அனைவரும் இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் ஒரு குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சிகளை தொடரும் 18 பேர் கொண்ட தூதுக் குழுவில் அமெரிக்கா, ஈரான், வங்களதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் முப்படை அதிகாரிகள் உள்ளடங்குவதுடன் அவர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர்.

தூதுக்குழுவினர் புதன்கிழமை (20)ம் திகதி யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு, யாழ். பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்குவை சந்திக்கவுள்ளதுடன் பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படை நினைவு தூபிக்கும் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் போது அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: