இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அரசை எச்சரிக்கும் ஞானசார தேரர்!

Sunday, September 20th, 2020

புலிகள் அமைப்பு நாட்டில் இல்லாதொழிக்கபபட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை பிரிவினைவாத கொள்கையை செயற்படுத்த பயன்படுத்திக் கொள்வார்கள். ஆகவே இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இரண்டாம் குடியரசு யாப்பு இதுவரை காலமும் 20 சீர்திருத்தங்களுக்கு உள்ளாகியுள்ளது. பிரதான இரு கட்சிகளும் ஆட்சியமைக்கும் போது தங்களுக்கு தேவையான விதத்தில் அரசியலமைப்பினை திருத்தம் செய்துக் கொள்கிறார்கள்.

இதனால் அரசாங்கத்துக்கு நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர நாட்டுக்கு எவ்வித அபிவிருத்திகளும், மாற்றங்களும் ஏற்படவில்லை.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கிய அரசியல்வாதிகள் 18 ஆவது திருத்தத்திற்கும், 19 ஆவது திருத்தத்திற்கும் ஆதரவு வழங்கினார்கள்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் கடந்த காலங்களில் அரச மற்றும் சமூக மட்டத்தில் பிரதான பேசுபொருளாக காணப்பட்டது. 19 ஆவது திருத்தத்தை ஆதரித்த அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக அதனை எதிர்க்கவும் ஆரம்பித்தார்கள். அது அரசியல்வாதிகளுக்கே உரித்தான தனித்துவ இயல்பு.

மேலும் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

தற்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திருத்தத்தில் இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் புலிகள் நாட்டில் இல்லாதொழிக்கப்பட்டாலும் அவர்களின் பிரிவினைவாத கொள்கை உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குபற்ற முடியும் என்பதை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் நிச்சயம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதுமட்டுமல்லாது சீனர்கள், இந்தியர்கள், ஆகியோர் எதிர்காலத்தில் இலங்கை நாடாளுமன்றில் உறுப்பினராக செயற்படுவார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமும் கிடையாது. ஆகவே அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை விவகாரத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: