இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை தேடும் பெப்ரல் அமைப்பு!

Friday, May 12th, 2017

இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்களா என தேடிப்பார்க்கப்படும் என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் அறிவித்துள்ளது.

இதற்காக நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களதும் விபரங்கள் திரட்டப்பட உள்ளன. தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் அடிப்படையில் இந்த தகவல்கள் திரட்டப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகித்தால் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு தமக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் இலங்கையின் சட்ட திட்டங்களை உருவாக்க தகுதியுடையவர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணக்கு ஒன்றின் போது எந்த நாட்டிற்கு ஆதரவாக செயற்படுவார் என்பதனை உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே நபர் ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுக்கொள்வதாக ரோஹன ஹெட்டியாரச்சி ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: