இன்றுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் ஆரம்பம் – கல்முனை மாநகர சபைக்கு இடைக்கால தடை!
Wednesday, January 18th, 2023உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படுட்டு வருகின்றன.
எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆரம்பிக்கப்படுமென தேர்தல் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி அறிவித்திருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து, அதற்கேற்ப கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவுக்குவந்தது.
அத்துடன் வேட்பு மனு கோரும் இறுதி நாளன்று வாக்களிப்பு இடம்பெறும்தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேநேரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை, நாளைவரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
எம்.ஏ. மொஹமட் சலீம் என்பவர் இது தொடர்பில் அடிப்படை உரிமை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோரினால் இடைக்காலத் தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்புமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதேநேரம், தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டமூலம் குறித்த விவாதம் ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தை ஒரு மாதகாலத்துக்கு ஒத்திவைக்க நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
|
|