இன்புளுவன்சா ஏ வைரஸின் தாக்கம் அதிகரிக்க கூடும் என பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை!
Friday, January 20th, 2023
இன்புளுவன்சா ஏ வைரஸ் இலங்கையில் பரவலாகப் பரவி வருவதாகவும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த வைரஸின் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
பத்தொன்பது மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட சளி பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாதாந்தம் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களில் ஐந்து வீதத்திலிருந்து பத்து வீதத்திற்கு இடைப்பட்டவர்கள் இன்புளுவன்சா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும், இந்த நிலைமைகள் மோசமடைந்தால், மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


