இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Saturday, December 18th, 2021

ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்று உறுதியான வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அவர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரிபு தொற்றுறுதியான வெளிநாட்டவர் தவிர்ந்த, ஏனையோர் குணமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தொற்றாளருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஒமைக்ரொன் தொற்று உறுதியானது.

இந்தத் திரிபை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு இரண்டு வாரங்களானமையால், ஒமைக்ரொன் தொற்று உறுதியானவர்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்..

இதேவேளை, இன்னும் ஓரிரு மாதங்களில் ஒமைக்ரொன் திரிபால், 5 ஆம் அலை உருவாகும் ஆபத்து உள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

இதேவேளை

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் செயலூட்டி தடுப்பூசியானது, கொவிட் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீத தீவிர நோய் பரவலை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஆராச்சியாளர் ஒருவரே இதனை தனது ஆய்வுகள் ஊடாக கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒமைக்ரொன் நோய்த்தொற்றுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை, செயலூட்டி தடுப்பூசி கணிசமாகக் குறைக்கிறது என்று பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: