இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வௌியாகும் செய்தியில் உண்மை இல்லை: பாதுகாப்பு செயலாளர்!

Sunday, April 3rd, 2022

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் இடம்பெற்ற இந்தோ ௲ ஶ்ரீலங்கா ஒன்றிணைந்த போர் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ புகைப்படமே, குறித்த உண்மைக்கு புறம்பான செய்தியில் பகிரப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் இருதரப்பு ஒன்றிணைந்த போர் பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இராணுவத்தினர் இலங்கையின் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.

பல்வேறு நோக்கங்களுடன் பகிரப்படும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி, எந்தவொரு நிலைமைக்கும் முகங்கொடுப்பதற்கு முப்படையினருக்கு இயலுமை உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: