இந்தியா – இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023

இந்தியா – இலங்கை இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இந்திய சுற்றுலா சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே,

கடந்த சில மாதங்களில் வாரத்திற்கு நான்கு முறை மட்டுமே இயக்கப்பட்ட சென்னை -யாழ்ப்பாண விமான சேவை, வரும் ஜூலை 16 முதல் நாள்தோறும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையே பல தசாப்தங்களாக இயங்காமல் இருந்த படகு சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு என்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி அனைவரும் நன்கு அறிந்துள்ளதாகவும் இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பணம் செலுத்துவதற்கு தங்கள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்த முடியும் என்பதால், இலங்கையில் இந்திய நாணயத்தைப் பயன்படுத்துவது சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இது வாழ்க்கையை மாற்றுவது மட்டுமல்லாமல் எல்லைகளைத் தாண்டிய பொதுவான பாரம்பரியத்தை உருவாக்கும் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: