இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது – சந்திரயான் 3 வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Thursday, August 24th, 2023

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கும் (இஸ்ரோ)  இந்திய மக்களுக்கும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மனித சமூகத்திற்காக இந்திய பிரதமர் மோடி ஆற்றிய இந்த அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளாமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியமைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்ப்பட்டது.

நாடாமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது’ எமது அண்டைநாடு என்ற வகையில் இந்தியாவின் இந்த சாதனைக்கு எமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.’ – என்று எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். அத்துடன்,  விமல் வீரவன்சவும் வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-03 இன் பிரக்யான் என்ற ரோவர் பகுதி தற்போது ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

முன்பதாக சந்திரயான்-03 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்தநிலையில், அதில் இருந்து பிர்க்ரோவர் பகுதி பிரிந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

எதிர்வரும் 14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் விண்கலமாக சந்திரயான் 3 உள்ளதால், அதன் ஆய்வுகள் குறித்து உலக நாடுகள் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றன.

இதனிடையே எதிர்வரும் நாட்களில் பல புதிய தகவல்களை சந்திரயான் 03 பூமிக்கு அனுப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும்.

பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும்.

ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கின்றது. அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகலாக இருக்கும். அடுத்த 14 நாட்கள் இரவாக நீடிக்கும்.

அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை பெற்றுக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும் என்பதுடன், ரோவரும் இயங்கும்.

அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் நிறைவுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது என்பதுடன், அதனால், அது செயல் இழக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், நிலவின் தென்துருவத்திற்கு அடுத்ததாக அனுப்பப்படும் சந்திரயான்-4 திட்டம், மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் அனுப்பப்படும்.

அதில், அனுப்பப்படும் கருவி மூலம் நிலவின் தரைப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதனை ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்

நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கமலா ஹாரிஸ், தெரிவிக்கை;யில் சம்பந்தப்பட்ட அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு இது ஒரு நம்பமுடியாத சாதனையாகும் என்றும் விண்வெளி ஆய்வில் உங்களுடன் பங்குதாரர்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: