இடமாற்றத்தில் பாதிக்கப்பட்ட நுண்கலைப்பாட ஆசிரியர்களை உடனடியாக சொந்த இடங்களுக்கு விடுவிக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் !

Friday, April 27th, 2018

2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தின்போது பாதிக்கப்பட்ட சங்கீதம், நடனம் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் வெளிமாவட்ட சேவைக் காலத்தை முழுமை செய்த நுண் கலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வடமாகாண கல்வித்திணைக்களம் உடனடியாக சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் வழங்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைத்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:

மேற்குறிப்பிட்ட நுண்கலைப் பாடங்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆசிரியர்கள் மேலதிகம் என காட்டப்பட்டதற்கிணங்க அந்த விடயத்தை எவ்வகையில் கையாள்வது என்பது தொடர்பில் இடமாற்றச் சபையிலும் மேன்முறையீட்டு சபையிலும் இரண்டு விதமான யோசனைகளையும் முன்வைத்திருந்தோம்.

ஆயினும் ஆசிரியர்களின் நலனில் அக்கறையற்று ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலை விவரங்களை வலயங்களில் பெற்றுவரும்படி அலைக்களித்துள்ளனர்.

வலயங்களும் வெளிமாவட்ட சேவை செய்யாத தமக்கு வேண்டப்பட்டவர்களின் தரவுகளை மறைத்து காப்பாற்றியுள்ளமை தொடர்பான விவரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இத்தகைய சயநலமான கல்விப்புல அதிகாரிகளால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் அலைக்களிக்கப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்தும் அனுமதிக்கப் போவதில்லை.

நடைமுறைச் சிக்கலை வடமாகாண கல்வித்திணைக்களத்தோடு இணைந்து தீர்ப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போதிய ஒத்துழைப்பையும் சாத்தியமான முன்மொழிவுகளையும் போதிய கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது.

ஆயினும் எமது இந்த விட்டுக் கொடுப்புகளை வடமாகாண கல்வித்திணைக்களம் அக்கறையுடன் செயற்படுத்தத் தவறவிட்டது. இன்னும் சில காலங்களில் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்படுவது தவிர்க்க முடியாது போகும்.

எனவே இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

Related posts: