ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தெரிவிப்பு!

Tuesday, April 27th, 2021

நாட்டில் ஒரு நாளில் 1000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அபாயகரமான நிலையில் நாடு உள்ளது என ஒப்புக் கொண்டிருக்கும் கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகள் பெரும்பாலும் நிரம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது.

அத்துடன் புதிய பிறழ்வு வைரஸால் இளம் வயதினர் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் இள வயதினர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனவும் கோவிட் 19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எனினும் தொற்று நோய் ஆபத்தைத் தணித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: