ஆதாரங்களை சமர்ப்பிக் வந்தேன், விசாரணையே நடைபெறவில்லை: வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்டு!

Thursday, November 3rd, 2016

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் மற்றும் காணொளிகளை சமர்ப்பிக்க வந்த போது அங்கு விசாரணை இடம்பெறவில்லை.  இது பொது மக்களை ஏமாற்றும் செயல் என வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டினை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவின் விசாரணை இன்று (03) வியாழக்கிழமை நடைபெறுவதாக கூறப்பட்டிருந்தது

இன்று அது தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க வந்த நான் ஏமாற்றமடைந்துள்ளேன். அங்கு விசாரணைகள் இடம்பெறவில்லை.இது குறித்து வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் ஊடகவியலாளரகளுக்கு தெரிவிக்கையில்,

வடமாகாண அமைச்சுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட வேண்டுமென கடந்த 09.02.2106 அன்று வடமாகாண சபையில் பிரேரணை மூலம் முன்மொழியப்பட்டு, வடமாகாண சபை உறுப்பினர் சயந்தனினால் வழிமொழியப்பட்டது.

இதனையடுத்து 25.02.2016 அன்று 08 பேர் கையெழுத்திட்டு முதலமைச்சரினால் பிரேரணை கொண்டு வரப்பட்டது. முதன் முதலில் கொண்டு வரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டு, இறுதியிலேயே விசாரணை மேற்கொள்வதாக முதலமைச்சர் கூறியிருந்தார்.

கிட்டத்தட்ட 08 மாதங்கள் விசாரணைகள் நடைபெறாத நிலையில், கடந்த ஒக்டோபர் 06 ஆம் திகதி, அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானத்தினால், இரு ஓய்வுபெற்ற நீதியரசர்களும், அரசாங்க அதிபர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதென்றும் அந்த விசாரணைக்குழு 03 மாதங்கள் இயங்கும் என்றும் பிரதமர் செயலாளர் அலுவலகத்தில் 03.10.2016 அன்று முதல் 3 மாதங்கள் இயங்குமென முதலமைச்சரினால் அறிவிக்கப்பட்டதாக சபையில் அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் சரியாக ஒரு மாதம் கழித்து இன்று ஆதாரங்களை கையளிப்பதற்காக வந்தேன். ஆனால் இன்று விசாரணைக்குழுவினரோ, அதற்கான அலுவலகமோ பிரதம செயலாளர் அலுவலகத்தில் இல்லை.

என்னிடம் ஆதாரம் இல்லை என அவதூறான செய்திகளும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் இவ்வாறு செயற்படுகின்றார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.10 குற்றச்சாட்டுக்களுக்கான எழுத்து மூல ஆதாரங்களும், அது தவிர இரண்டு காணொளிகளையும் வைத்திருக்கின்றேன்.

ஏற்கனவே, 08 மாதங்கள் கடத்தப்பட்டு விட்டன. பின்னர் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பிப்பதாக கூறி பின்னர் ஒரு மாதங்களும் கடத்தப்பட்டு விட்டன.அமைச்சர்கள் மீதான விசாரணைகள் எதுவும், வடமாகாண முதலமைச்சரினாலோ, வடமாகாண சபையினாலோ முன்னெடுக்கப்படவில்லை என பொது மக்களுக்கு அறிவிப்பதாகவும், வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

northern_provincial_council-

Related posts: