ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியசேவைக்கு இணைக்கமுடியாது!

Sunday, December 3rd, 2017

ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்கமுடியாது என தெரிவித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆசிரிய பயிற்சி சான்றிதழ் உள்ளவர்களை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள பின் தங்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி 2015 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் பின்தங்கிய பாடசாலைகளுக்காக உயர்தரம் சித்தியடைந்த மூவாயிரம் பேர் அமைச்சினால் நியமிக்கப்பட்டனர்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தோட்டப்பாடசாலைகளிலுமுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களை ஆசிரியர் சேவையின்  3 – ii பிரிவுக்கு இணைக்க முடியுமான போதும் அவர்களைத் தொடர்ந்து 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி தொடர்ந்து சேவை பெற்று வருகின்றனர்.

பின் தங்கிய பாடசாலைகளில் இவர்கள் தான் முழுமையாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் எனத் தெரிவித்த அவர் இவர்களுக்கு சிறிய கொடுப்பனவே வழங்கப்படுவதாகவும் இது முழு ஆசிரியர் சேவைக்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு கூட வழங்கப்படுவதில்லை. இவர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஆசிரியர் உதவியாளர்களாக இவர்கள் நியமிக்கப்படுகையில் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. நாம் 2017 முதல் 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

இவர்கள் ஆசிரியர் சேவை பயிற்சிக்குப் பின்னர் 3 – I தரத்திற்கு இணைப்பதாக நியமனம் வழங்கும் போது குறிப்பிடப்பட்டிருந்தது. 3 – ii தரத்திற்கு இவர்களை நியமிக்கமுடியாது.

31,060 ரூபாய் சம்பளம் கிடைக்கக் கூடிய ஆசிரியர் சேவை தரம் 3 – i இற்கு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related posts: